Saturday, January 30, 2010

ஏங்கல்ஸ் ராஜா, M.B.A (27), விவசாயி


தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!


"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!



"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.



வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.


முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"

ஏங்கெல்ஸ் ராஜா அலைபேசி எண் : 94421-21473

நன்றி : இளமை விகடன்


Thursday, January 28, 2010

மதுரையில் குழந்தைகள் நல கருத்தரங்கு - நினைவூட்டல்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே மதுரைப் வலைப்பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி
இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.

தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....
dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com
______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரை வலைப்பதிவர்களுக்கு ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக....மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.





Tuesday, January 26, 2010

தமிழக வரலாற்றில் இருவேறு தாக்கங்கள்

தமிழக வரலாற்றில் இருவேறு தாக்கங்கள்
என்ற தலைப்பில்

27.01.2010 புதன் மாலை 6.00 மணிக்கு
பேராசிரியர். சுப.வீரபாண்டியன் அவர்கள்
சிறப்புரை நிகழ்த்துகிறார்.
விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்
இடம்: பெரியார் மன்றம், கச்சேரி வீதி, ஈரோடு
நிகழ்ச்சி நடத்துபவர்கள்: பெரியார் படிப்பக வாசகர் வட்டம்

Monday, January 25, 2010

இலவச பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை...

தீக்காயம் பட்டவரை சந்திக்க நேர்ந்தாலோ அல்லது காது, மூக்கு மற்றும் வாய் தொடர்பான (பிறப்பால்) பிரச்சினையினால் வாடுவதை கண்டாலோ அவர்களை "பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்" ஐ தொடர்பு கொள்ளச் சொல்லவும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மார்ச் மாதம் 23 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இலவசமாக சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்ய இருக்கிறார்.

தொலைபேசி எண் : (04542) 240778 and 240668

How to register?

You can either contact in person or make a phone call or e-,mail on the below given details

Address:
Pasam Hospital
M.M. Street,
Kodaikanal,

Phone: (04542) 240778 and 240668
e-mail: pasam.vision@gmail.com


குறிப்பு:
இது மின்னஞ்சல் மூலம் கிடைத்த தகவல்


Sunday, January 24, 2010

ஈரோட்டில் ஜெயமோகன் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டு விழா





இன்று காலை 10 மணியளவில் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டுவிழா நடைபெறுவதாக அழைப்பிதழ் கிடைத்தது. இயல்பான செயல்பாடுகளில் இருந்து வேறுபடும் நாள் ஞாயிறு என்பது மட்டுமே அந்நாளைப் பற்றிய என் புரிதல். மெதுவாக எழுவது, குளிக்காமல் காலை உணவருந்துவது, 11 மணிக்கு படுத்து தூங்குவது, மதியம் என் அறையை சுத்தப்படுத்துவது, மாலையில் குளிப்பது, இரவு குடும்பத்தினரோடு ஊர் சுற்றுவது இப்படி பல...............


ஒரு மாற்றாக, இன்று நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து தயாராகி, கூட்டம் நடைபெறும் அரங்கினுள் நுழையும் போது, சராசரி இந்தியனாகி, வரவேற்புரை முடிந்து, புத்தகம் வெளியிடப்பட்டு, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசி முடித்து, திரு ஆறுமுகத் தமிழன் பேசிக் கொண்டிருந்த போதுதான் தாமதமாக உள் நுழைந்தேன்...

"இன்றைய காந்தி" புத்தகத்தில், மொழிவழி தேசியத்தை விடுத்து பண்பாட்டு வழி தேசியம் சரி என்ற ஜெயமோகனின் எழுத்துக்கள் சரியல்ல, என்ற தன் விமர்சனத்தை முன்னிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஈழப்பிரச்சனை குறித்து ஜெயமோகன் பார்வையில் சிறு தடுமாற்றம் உள்ளது என்பதாக அவர் பேசினார்.

ஆனித்தரமான பேச்சு, அழகான சொல்லாடல்கள், சொல்ல வந்ததை விவரித்தமை மிக அருமையாக இருந்தது. இந்த நூல் காந்தியை ஒரு புதிய கோணத்தில் நெருங்கிச் சென்று பார்க்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசவந்த "மரபின் மைந்தர் முத்தையா" இந்த புத்தகத்தில் காந்தியைப் பற்றிய பல்வேறு அறியப்படாத தகவல்கள் இருக்கின்றன. காந்தியின் பிள்ளைகள் குட்டிச் சுவராகப் போனதாக பலரும் பல இடங்களில் பேசுவதை காண்கிறோம். அது தவறு, ஒரு பிள்ளையைத் தவிர மற்ற மூவரும் மிகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள், என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது என்று கூறினார்.

அடுத்து வந்தவர், பெயர் மறந்துவிட்டேன்....(நண்பர் மன்னிக்கவும்.....)காந்தி பற்றிய தன் ஆய்வையும், அவர்வாழ்க்கை முறை பற்றியும் காந்தியின் ஆளுமை பற்றியும் நிறைய பேசினார். காந்தி என்ற மகாத்மாவின் சாதனைகளை பட்டியலிட்டுச் சொன்னார். எதற்காக அந்த காந்தி புகழ் பாடும் பேச்சு, என்பது புரியவில்லை. காந்தி ஜெயந்தி விழாவில் நம்மூர் கதர் சட்டைகளின் பேச்சை மீண்டும் நினைவு படுத்தினார்.

காந்தியை பற்றிய எந்த உள்ளார்ந்த உருவகமும் இல்லாமல் வளர்ந்தவன். காந்தியின் படங்கள், அவர் பற்றிய பேச்சுக்கள் போன்ற எந்த ஆளுமையும் என்னுள் நிறைந்ததில்லை. ஆதியின் படங்கள் தான் முதன்முதலில் அவரை நோக்கி என்னை திரும்பி பார்க்க வைத்தவை என்ற தகவல் பகிர்வோடு பேசத் தொடங்கினார் பவாசெல்லத்துரை. இடது சாரிகள் இந்த புத்தகத்தினை விமர்சிப்பார்கள் என்று நாஞ்சில் நாடன் பேசினர். நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை, ஆனால் ஜெயமோகன் எழுத்துகளை நான் அறிவேன், புத்தகத்தின் சில வரிகளை மேற்கோள் காட்டி, காந்தியைப் புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்றும் பேசினார்.

வழக்கமான, தனக்கே உரித்தான பாணியில் மார்க்ஸிய தாக்கத்தைப் பற்றி பேசியவர், விரைவில் ஜெயமோகன்" "இ.எம்.எஸ்" பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற தன் கோரிக்கையையும், மேடையில் வைத்தார்.

ஜெயமோகனும் தன் ஏற்புரையில் எழுதுவதாக உறுதி சொன்னார். விரைவில் தோழர் இ.எம்.எஸ் பற்றிய ஜெ.மோ.வின் புத்தகத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம்.......

இறுதியாக ஏற்புரை வழங்க வந்த ஜெயமோகனின் பேச்சு, அற்புதம். இந்த புத்தகம் எதற்காக எழுதப்பட்டது என்பதில் தொடங்கி, ஒரு நீண்ட ரசிக்கும்படியாக,பல புதிய தகவல்களோடு சிந்தனையை துண்டும் ஒரு உரையாக அமைந்தது.


சில மாதங்களுக்கு முன் ஒருநாள் தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மூத்த தலைவரோடு பேசிக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் காங்கிரஸ்காரரான அவர் பேசும் போது, "வல்லபாய் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக ஆக்க காந்தி முடிவு செய்ததன் காரணம், குறைந்தது 20 ஆண்டுகளாவது, இந்தியா ஒரு தலைமையின் கீழ் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும், பட்டேலின் வயது அதற்கு தடையாக இருந்தது....காந்தி நினைத்தது போல் சில ஆண்டுகளிலேயே பட்டேல் மறைந்தார். என்று காந்தியின் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார்.

இன்று ஜெ,மோ பேசும்போது, தன்னுடைய நம்பிக்கைகுரிய விசுவசியாகவும், சொந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக்கியது, இந்த நாட்டின் நலன் கருதிதான். தன்னுடைய கருத்துக்கள், கொள்கைகள், நேருவால் பின்பற்றப்படாது என்று தெரிந்தும், அவரை பிரதமராக்கியது நேருவின் மதச்சார்பிமை கொள்கைதான் என்ற தன் கருத்தை அழகாக வெளிப்படுத்தினார்.

காந்தியை பற்றிய தவறான விமர்சனங்களும், அவர் பற்றிய மக்களின் புரிதலும் தான் இந்த புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. மகாத்மாக உருவகப்படுத்த பட்ட காந்தியைப் பற்றி இதில் எழுதவில்லை. காந்தியைப் பற்றிய நம் மூடத்தனமான புரிதலை நீக்கி, காந்தி எப்படிப்பட்டவர் என்று படித்து அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்களைத் திரட்டி இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.


திரு ஆறுமுகத் தமிழன் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெ.மோ, ஆயுதப் போராட்டத்தின் தோல்விகள் மிகுந்த வலியை கொடுத்துள்ளன. பல லட்சம் பேரை இழந்து இன்று தோற்றிருக்கிறோம். ஆயுதப் போராட்டங்கள் வெற்றிதராது என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. காந்திய பாதை தான் என்றும் நிலைத்திருக்கும். கால மாற்றம் காந்தீயத்தை அழித்துவிடமுடியாது...என்ற ஒரு விரிவான உரையை ஆற்றினார்.


இறுதியாக நன்றி கூற வந்த நண்பர் விஜயராகவன் ஒரு அழகான கருத்தைச் சொன்னார். ஒரு கருத்தை வாதம் செய்வது, எதிர்வாதம் செய்வது, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள அல்ல, இறுதியில் ஒர் புரிதலோடு இருவரும் பிரிதல்தான் என்று குறிப்பிட்டது மிகவும் உண்மையான சிந்தனையை தூண்டிய கருத்து.


கண்மூடித்தனமாக காந்தியை விமர்சிப்பவர்களுக்கும், காந்தியை புனிதராக கொண்டாடுவோருக்கும், இடையே காந்தியை பல்வேறு கோணங்களில் இருந்து எழுதியிருக்கும் ஜெ.மோ வின் இந்த புத்தகம் காந்தியைப் பற்றிய ஒரு பெரும் புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.


காந்தியத்தின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு, காந்தி நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் நடத்தி, காந்திய சிந்தனைகளை சுமார் 20 தொகுதிகளாக வெளியிட்ட என் தந்தையோடு, நான் வேறுபட்டு, பல இடங்களில் கண்மூடித்தனமாக, அரை குறை கேள்வி ஞானத்தோடு காந்தியை நான் பல இடங்களில் விமர்சித்தது உண்டு.


இந்த புத்தகத்தை படிக்கவில்லை. விரைவில் படித்து முடித்துவிடுவேன். அதன் பின் காந்தி பற்றிய என் பார்வை விசாலமாகலாம். என் புரிதல் கூடலாம்... இது வரை நான் பேசியதற்காக வருத்தமும் படலாம்......


மிகுந்த எதிர்பார்ப்புகளோடும், காந்தி பற்றிய என் தவறான புரிதலின் காரணம் தேடியும் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றேன்.............


அன்புடன்
ஆரூரன்.



Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்




பொங்கலின் இனிமையும், செங்கரும்பு செந்தேன் சுவையும்,
மஞ்சள் மணமும், மங்கள மகிழ்வும் மனைதனில் நிலைபெற
மக்களனைவரும் வளம்பெற வாழ்த்துக்கள்.


Friday, January 8, 2010

காமராஜரை தெரியாது.... விஜய் தெரியும்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.

செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.


அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________

Monday, January 4, 2010

மின்னஞ்சல் குழுமம் துவக்கம்

இனிய நண்பர்களே..

நமது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்களுக்காக மின்னஞ்சல் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குழுமத்தில் உள்ள பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழ்காணும்
erode-tamizh@googlegroups.com
என்ற மின்னஞ்சல் குழுமத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்

நன்றி

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO