Monday, March 1, 2010

வரமாய் வந்த மனைவி...

கையெழுத்துக் கூட ஒழுங்காய் போடத் தெரியாத ஒருவர், சென்னை‍யில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் துறையில் வகுப்பெடுக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.


கானா விஜி-‍‍ கருத்த தேகம், போலியோவில் பாதிக்கப்பட்டு ஒருகால் ஊனம், பிறப்பின் புனிதம் அறியாமை, பான்பராக் போட்டு குதப்பிக் கொண்டே பேசும் பேச்சு, பரட்டை தலை என பார்ப்பதற்கு பயங்கர தோற்றமாய் தான் முதலில் இருப்பார். அதே சமயம் அவர் பாட்டுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்.. அத்தனை தெளிவான தத்துவ பாட்டுகள், ஊர் அறியாத மெட்டுக்கள்.




இரண்டு வருடங்களுக்கு முன், அலுவலக ரீதியாக அவரைச் சந்தித்தேன். அதுவரை என் மனதில் அன்னை தெரசா, பில்கேட்ஸ், பெரியார் என யாரோ என் ரோல்மாடல்களாக இருந்தார்கள். விஜியை சந்தித்த பிறகு அவர் மட்டுமே என் ரோல்மாடல்.. இப்போதும் எப்போதும்.. இனி விஜியுடனான என் சந்திப்பு..


''நம் மெரினா பீச்சாண்டதாங்க... நான் தம்மாத்தூண்டு கொழந்தையா இருந்தப்பவே எங்கம்மா என்னைக் கொண்டாந்து ரோட்டோரமா போய்ட்டு போயிடுச்சாம். பாவம்.... அதுக்கு என்ன கஸ்டமோ! நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அயோத்தி குப்பம் ஏரியால தான் சுத்திக்கினு கெடந்தேன். எனக்கு பேரு ஒன்னும் கிடையாது. விலைமாது தொழில் பார்த்த விஜி அக்காதான் என்னை எடுத்து வளர்த்துச்சு.... கஸ்டமர்‍க்கிட்ட போகும் போதும் என்னை தூக்கிக் கிட்டு போகும். என்னை ஓரமா உட்கார வெச்சுட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரும் போது பிரியாணி வாங்கி வந்து தரும்.. அதுவும் ஒரு நாள் நோய் வந்து செத்துப் போச்சு...'தா விஜி கூட சுத்திக் கிட்டு இருப்பான்னேன்னு எனக்கும் விஜின்னே பேரு வந்திடுச்சு..


விஜி அக்கா செத்து அதை சுடுகாட்டுக்கு தூக்கிக் கிட்டு போகும் போது, ஒருத்தர் கானா பாட்டு பாடிக்கிட்டே சுடுகாடு வரைக்கும் வந்தார்.. அன்னிக்குத்தான் முதன் முதலா எனக்கு கானா பாட்டுமேல ஆர்வம் வந்திச்சு... எப்படா பொணம் விழும்,கானா பாட்டு கேட்ப்போம்ன்னு சுடுகாட்டில திரிவேன்.. பொணம் எரிப்பேன்... கையில் காசு இல்லாம சின்ன சின்ன திருட்டு வேலை செஞ்சிருக்கேன்.. போலீஸ் ஸ்டேஷனெல்லாம் நமக்கு அத்துப்படி..என்று தன்னைப் பற்றி முன் உரை தந்தவர்.. தன் மனைவியைப் பற்றி சொன்னார்..




''ராயபுரத்தில ஒரு சேட்டம்மா இருக்கும். அம்மாவாசை பவுர்ணமி அன்னிக்கு என்னை மாதிரி ஏழைங்களை கூப்பிட்டு சோறு போடும்.. கையில் காசு குடுக்கும். எனக்கு அந்தம்மான்னா மரியாதை.. ஒருதபா ஜெயிலுக்கு போய்ட்டு வந்து ''எங்கடா சேட்டு வூட்டு அம்மான்னு விசாரிச்சா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்குதுன்னாங்க.. போனா உசிர் போயி.. தூக்கிப் போட ஆளில்லாம கிடக்குது.. ஏன்ன்னு கேக்க யாரும் இல்லை.. யாரோ ஒரு சேட்டுக்கு மூணாவது பொண்டாட்டியா இருந்ததாம்.. அவனும் ஓடிப் போய்ட்டானாம்.. மனசு கேக்கலை எனக்கு.. அதுவரைக்கும் நான் சேர்ந்து வைச்சிருந்த இரும்பை கடையில் போட்டு, அங்கங்க அல்லு பொறுக்கி காசு சேர்த்து அந்தம்மாவை அடக்கம் செஞ்சேன்.. அப்போ அந்தம்மா கூடவே இருந்த பொண்ணுதான் என் பொண்டாட்டி சாந்தி... பக்கத்திலேயே நின்னு அழுதுக்கிட்டு இருந்திச்சு... அடக்கம் பண்ணிட்டு திரும்பி பார்த்தா என் கூடவே நின்னு அழுதுக்கிட்டு இருக்கு.. உன் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களான்னு சொல்லு. அவங்க வீட்டில விடறேன்‍ன்னு கேட்டேன். யாரும் இல்லைன்னு பரிதாபமா சொல்லுச்சு.. சரி என் கூட வர்றியான்னு கேட்டதும் போதும் என் கூடவே வந்திருச்சு" என்று சொல்லியவாறே தன் மனைவியியை அறிமுகம் செய்து வைத்தார்.. கணவரின் வார்த்தைகளை தொடர்ந்தார் சாந்தி..



''அம்மா செத்ததும் சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்ல... எங்கம்மாவை அடக்கம் பண்ணின இவர் என்னையும் பார்த்துக்குவாருங்கிற நம்பிக்கையில் இவர் கூட வந்தேன். ஆரம்பத்தில சுடுகாடு பக்கத்தில்தான் இருப்போம். அப்புறம் நான் பயப்படறதைப் பார்த்துதான் வடபழனி பக்கத்தில வீடு பார்த்து குடி வெச்சார். இவரைப் பார்க்கறப்பெல்லாம் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். பெயர் தெரியாம ஒருத்தங்க இருப்பாங்களா என்ன? கூடவே தங்கியதில் ரெண்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. ஒண்ணா குடித்தனம் நடத்த ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில இவரைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கும். மணடை ஓடு, கோடாங்கி இதெல்லாம் வீட்டில வெச்சிருப்பாரு. திடிர்ன்னு காணாம போயிருவாரு, தேடின்னா சுடுக்காட்டில் படித்திருப்பாரு.. கேட்டா எனக்கு இங்கதான் தூக்கம் வருதுன்னு சொல்வார். கெஞ்சி, கொஞ்சி, அழுது ஒருவழியா அவரை வழிக்கு கொண்டு வந்தேன்" என்றபடியே விஜியைப் பார்க்க மிச்ச கதையை அவர் தொடர்ந்தார்.


''தெனமும் ஒழுங்கா குளிக்கணும்.. சட்டை போடாம வெளிய போகக் கூடாது, கிடைக்கிற காசை ஒழுங்கா சேர்த்து வைக்கணும், இதெல்லாம் சொல்லிக் குடுத்தது எனக்கு சொல்லிக் குடுத்தது அவள்தான். சாந்தி பேச்சக் கேட்டுத்தான் சுடுகாட்டுக்குப் போறதை நிறுத்தினேன்.. என் பாட்டு நல்லா இருக்குங்கிறதால வீதி நாடகத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்புறம் ''கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன்"" என்றவருக்கு அதன் பின் வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன..


இவரது வீதி நாடகங்களுக்கு பரிசும் பட்டமும் தேடி வந்திருக்கிறது. இவரைப் பற்றி டாக்குமண்ட்ரி படமும் வெளியாகியிருக்கிறது. தனியாக ஒரு நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மனைவியில் முயற்சியில் கையெழுத்து போடக் கற்றுக் கொண்டார். கால் ஊனத்தையும் தாண்டி டூவீலர் ஓட்டக் கற்றுக் கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள்.. தான் பட்ட கஷ்டத்தை தன் மக்களும் படக் கூடாது என்று பெரிய பள்ளி ஒன்றில் தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்கிறார்.


இன்னிக்கு கல்லூரிகளில் அவர் சொல்லித் தரும் கானாப்பாடல்கள்தான் அன்று சுடுகாட்டில் பாடப்பட்டது... நேரமும் காலமும் கூடி வர இவருக்கு இன்று கைத்தட்டல் கிடைக்கின்றது..


வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு வருகிறது விஜிக்கு.. ஆனால் இவர் பெயர் மற்றும் அப்பா அம்மா பெயர் தெரியாததால் ரேஷன் கார்டு தர மறுத்துவிட்டது அரசாங்கம். பாஸ்போட்டுக்கும் அதே நிலைதான். இருப்பினும் தான் கடந்து வந்த இவ்வளவு தூரத்திக்கும் வழிதுணையாக வந்த மனைவி‍‍க்கு நன்றி சொல்லியே மீதமிருக்கும் நாட்கள் நகர்கிறது விஜிக்கு..


(கட்டுரை பற்றிய குறிப்பு): நான சந்தித்த சமயம், விஜிக்கு சினிமா படத்தில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அதன் பின் சில போன் உரையாடல்கள் தொடர்ந்தன.. சில மாதங்களில் அதுவும் நின்று போனது.. இருப்பினும் நான் சந்தித்த மனிதர்களில் மறக்க முடியாதவர் இந்த விஜி. அவரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுதான். பெயர் தெரியாமல் அனாதையாக திரிந்து வளர்ந்தவர் விஜி. அவரால் இன்று ஒரு கல்லூரியில் ஆசிரியராகி இருக்க முடிகிறது. அப்படியென்றால் நாமெல்லாம் சொக்க தங்கம். சொந்த வீடு, அம்மா அப்பா, அடிப்படைக் கல்வி, கொஞ்சம் போலவேனும் காசு, இன்னும் இன்னும்,, நமக்கென்ன குறை... நிச்சயமாய் இன்னும் சாதிக்கலாம். எனக்குள் விஜி விதைத்த விதை இதுதான்).


எழுதியது

சுபிவண்யா

அவரது வலைப்பூ (பிரேமா மகள்)




17 Comentários:

vasu balaji said...

அற்புதமான மனிதர்(ம்)

கலகலப்ரியா said...

motivated & inspired..! simply great..!

வால்பையன் said...

பகிர்விற்கு நன்றி!

பழமைபேசி said...

ஆக்கமும் ஊக்கமும்.... நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

ஆச்சரியமான மனிதர் தான்.....பகிர்வுக்கு நன்றிங்க

ஈரோடு கதிர் said...

மிக அருமையான பகிர்வு...
நன்றி பிரேமாமகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல உதாரணம்.

*இயற்கை ராஜி* said...

அருமை:-)

venkat said...

nalla pathivu

PPattian said...

விஜிக்கு வாழ்த்துகள்.. பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

What a motivational story. Keep up the good work

Majid Hussain said...

அருமையான பதிவு, போட்டோவும் சேர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.

அப்துல், Dubai

க.பாலாசி said...

வாழ்க்கைப்பாடத்தினையும் அவரிடம் கற்கவேண்டும்....

நல்ல கட்டுரை லாவண்யா....

Anbarasu S said...

மிக்க நன்றி. விஜிக்கு வாழ்த்துகள்.

govindasamy said...

நல்ல கட்டுரை
unmaivrumbi
mumbai.

அகல்விளக்கு said...

அருமையான முன்மாதிரி...

Anonymous said...

நல்ல கட்டுரை லாவண்யா....

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO