Wednesday, June 16, 2010

பல்வலியும் நெஞ்சுவலியும்...

ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை "அப்பா முருகா இன்னைக்கு என்னைய நம்பி வர்ற பேஷன்ட் நல்லது செய்ய எனக்கு வழிகாட்டு" என வேண்டியபடி கடைய திறந்து இருந்தேன். வருகிறேன் எனச் சொன்ன பேஷன்ட்களில் ஒருவர் மட்டும் வந்து பல் சுத்தம் செய்து சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வந்தார்கள் பல் எடுக்க.அந்த சிறுவனுக்கு அவனுடைய கடவாய் பல் மிகவும் சொத்தையாகி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. சிறுவன் பார்க்க ஆரோக்கியமாய்தான் இருந்தான் என்பதால் நானும் பொதுவான கேள்விகள் கேட்டு பல் எடுப்பதற்குமுன் குடுக்க வேண்டிய ஊசிமருந்தை செலுத்திவிட்டு என்ன படிக்கிறாய், என்ன சாப்பாடு, என்ன சினிமா பார்த்தாய் போன்ற கேள்விகள் மட்டும் கேட்டு அவனை ஆசுவசபடுத்திகொண்டு இருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் போதிய மரவிப்பு வந்ததாய் சொல்லிய பின் பல் எடுத்தேன். நீண்ட நாட்களாய் சொத்தையாய் இருந்ததால் வலிக்கிறது,மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று கூறினான். பல் எடுத்த பின்.இது சகஜம் தானே என வலி மருந்தை ஊசியில் செலுத்திவிட்டு சிறிது நேரம் படுத்து இருக்கச்சொன்னேன். "அப்பா பிரச்சினை இல்லாம முடிஞ்சுது பல் உடையல" என்று எண்ணியபடி அவன் தந்தையிடம் பேச ஆரம்பித்தேன். "ஏங்க இவ்வளவு மோசம் ஆகிறவரை என்ன செஞ்சீங்க ? கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா பல்லை வேர் சிகிட்சை செய்து காப்பாத்தியிருக்கலாம், இல்ல பல் எடுக்கணும் என்றலும் முன்னாடியே செஞ்சுருக்கலாம்" என்று சொல்லிமுடிக்க அவர் "இல்லங்க எடுத்து இருக்கலாம்தான், ஆனா நெஞ்சுவலினு ஆசுபத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு திரிஞ்சு அதுதாங்க லேட் ஆகி போச்சு "என்றார். எனக்கோ "ஐயோ இவரை போய் நாம் கடிஞ்சுட்டமே" எனத்தோன்ற குரலில் கொஞ்சம் சாந்தம் வரவழைத்து "இப்ப பரவாயில்லையா?, அவங்க அம்மா கூட பையன அனுப்பிருக்கலாமே" என்று சொல்லிமுடித்தேன்.

அழகாய் சொன்னார் "நெஞ்சுவலி எனக்கு இல்லீங்க, பையனுக்கு" என்றார். சரி அதுவேறு மகன் என்று எண்ணிய படி கேட்க,அவர் சொன்ன பதில் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறை. இப்ப பல் எடுக்கப்பட்ட சிறுவன் தான் இருதயநோயாளி. இதற்கு முன் பார்த்த பல் டாக்டர்கள் ரத்தஅழுத்தம், மற்றும் இருதய நிபுணரின் பரிந்துரை வேண்டும் எனக்கூறியிருக்கலாம். அந்த அனுபவத்தில் பாடம் கற்ற அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் எனக்கும் ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. மறுமுறை நாளை வர வேண்டும் என்று கூறி பல் எடுத்தபின் கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கூறி விடைகொடுத்தேன். அவன் நல்ல நேரமோ என் நல்ல நேரமோ எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.



உங்களுக்கு அலைய முடியாது என்பதற்காக மருத்துவரிடம் எந்த தகவலையும் மறைக்காதீர்கள். உங்களுடைய எந்தவொரு உடல் நலக்குறைவையும் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அதற்கு மாற்று மருத்துவமுறை இருக்கும் . அறிவாளிகளாய் மருத்துவரிடம் இருந்து எதையும் மறைத்து உங்கள் சிரமத்தை பின்னர் அதிகம் ஆக்கிக்‘கொல்லா’தீர்கள். ஆம் எழுத்து பிழை அல்ல வாழ்க்கையே பிழை ஆகும் என்பதை சொல்லவே இந்த "கொல்லாதீர்கள்".

ஒரு நபர் மருத்துவமனையில் இருந்து திடகாத்திரமாக வெளியேறுவது வரை மருத்துவரின் பொறுப்பு. பல் எடுத்து இரண்டு நாள் கழித்து மரணம், ஒரு மாதம் கழித்து கான்சர் வந்தது என்பது எல்லாம் மருத்துவதுறையால் மறுக்கப்படும் சம்பவங்கள். பல் எடுக்கப்பட்டது மட்டுமே ஒருவரின் மரணதிற்கோ இல்லை வேறு உடல்நலக் குறைவுக்கோ காரணமாய் இருக்க முடியாது. பல் எடுக்கப்பட்ட பின் அந்த நோய் தன்னை வெளிப்படுயிருக்கலாம் என்பது மட்டுமே உண்மை. பெரும்பாலும் சொல்லப்படும் சோதனைகளும், சிகிச்சைக்கு முன், பின் கூறப்படும் அறிவுரைகளும் உங்கள் நலனுக்கே. தங்கள் விருப்பம் போல் மருந்து உட்கொள்வது, மருத்துவரின் அறிவுரைகளை புறக்கணிப்பது நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் மிகபெரிய கண்டிக்கக்கூடிய செயல்.

பின் ஏதும் தவறு நடக்கும் பொழுது மருத்துவரை குறை கூறி பயன் இல்லை. உங்கள் நலனை பேணுவது தான் மருத்துவரின் தலையாய கடமை. உங்கள் நலனை காக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.


நன்றி
பல் மருத்துவர் ரோகிணி சிவா
அவரின் வலைப்பூ


...

1 Comentário:

பிரேமா மகள் said...

அப்படியா?

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO