Thursday, March 18, 2010

'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை அரக்கன் !'

தங்களின் சந்தோஷத்துக்காக சுற்றுலா செல்பவர்கள் ஒரு வகை! உலக நன்மைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவகை! தாமரை... இதில் இரண்டாவது வகை!

சுற்றுச்சூழல் சீர்க்கேடு குறித்து உலகமெல்லாம் சுற்றி வரும் தாமரையைப் பற்றி அறியும்முன், அவர் கணவர் சீனிவாச ராவ் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், தன் நண்பன் ஞானசேகரனுடன் இணைந்து, உலகத்தில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற வேண்டி 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து, உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து தன் பதற்றத்தை பதிவு செய்தவர் சீனிவாச ராவ். 1987-ம் வருடம், அக்டோபர் ஐந்தாம் தேதியை, சீனிவாசராவ் மற்றும் ஞானசேகருடைய தினமாக பிரகடனம் செய்தது அமெரிக்கா! அந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.

இத்தனை வருடங்களாக தேக்கமின்றி தொடரும் சீனிவாச ராவின் பயணத்தில், தன்னையும் தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளவர்தான் தாமரை! இவர், பிரபல அரசியல்வாதியான பேராசிரியர் தீரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது!

"எங்களின் இத்தனை வருட சுற்றுப் பயணத்தில், சமீபத்தில் கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம், 'இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' என்ற தெளிவை, பதற்றத்தை, பயத்தை தந்தது!'' என்று ஆரம்பித்தவர், அந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"அந்த மாநாட்டு அரங்குக்கு அருகிலேயே, எங்களைப் போல உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்ட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்கள் நடத்திய 'மக்கள் மாநாடு (The People Summit) நடந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை வலியுறுத்திய அந்த நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நம் பூமியை பாதுகாக்க வேண்டிய மிகமுக்கிய தருணத்தில் நாம் இருப்பதை அந்த மாநாட்டின் மூலம் உணர்ந்தேன்!

நடந்து முடிந்த மாநாட்டை 'வெற்றி' என்று வகைப்படுத்துவது சரியாக இருக்காது. அதற்கு காரணம், அமெரிக்காவைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான திட்டவட்ட தீர்வும் இல்லாததே. அதுமட்டுமன்றி, இந்த கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 26 முக்கிய நாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்களான பல மூன்றாம் உலக நாடுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன.



கூடவே, 'இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான சட்டதிட்டத்தையும் உருவாக்காத வகையில் இந்த மாநாட்டை தங்களுக்கு சாதகமாக திருப்பி குழப்பம் செய்து விட்டன' என்று வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அவசியமான கட்டுப்பாட்டைக்கூட நம் அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிளாஸ்டிக் பைகள்தான் கழிவுநீர் வாய்க்காலில் சென்று நீர் செல்வதை தடுத்து விடுகிறது. தேங்கிய சாக்கடை நீரின் வாயிலாகத்தான் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன என்பதை நாம் சரிவர இன்னும் உணராமல் இருக்கின்றோம். கழிவு வாய்க்கால்கள் அடைத்துக் கொள்வதால், மழைக் காலங்களில் நமது நகரங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்காகி விடுவதை பார்த்து வருகின்றோம்.

இந்த சிறுசிறு விஷயங்களில்கூட கட்டுப்பாடு பழகாத நாமும், நமது அரசும், அணு உலைகளால் ஆபத்து, கரியமிலவாயு கட்டுப்பாடு, பருவநிலை மாறுபாடு, புவிவெப்பநிலை உயருதல் என்கிற அதிபயங்கர ஆபத்துகளையெல்லாம் எப்படி சரிவர புரிந்துகொள்ளப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியவர்...

'அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடையே இதுபற்றிய விழிப்பு உணர்ச்சி தற்போது அதிகமாகவே உள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அரசுகளும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான கடுமையான சட்டதிட்டங்களை வரையறுத்துள்ளன. காலம்கடந்தாலும்கூட, இது ஒரு ஆரோக்கியமான மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது என்பதில் என்னைப் போன்ற சூழல் ஆர்வலர்கள் பெருமை கொள்கிறோம்" என்று புன்னகை பூத்தார்.

தொடர்ந்தவர், "இயற்கையின் போக்கை மாற்றிய மனிதனின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால், கரியமில வாயுக்களின் அளவு கூடி, இன்றைய பூமியின் தட்பவெப்ப நிலை மாறிப் போயிருக்கிறது. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையின்படி தற்போதைய கரியமில வாயுவின் விகிதாச்சாரம் அண்டவெளியில் சேர்வது தொடருமானால் 2030-ம் ஆண்டில் நம் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, அது ஒட்டுமொத்த உயிரினங்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சியான உண்மை.

அதேபோல, அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளும் பனித்தகடுகளும் உருகி வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதன் விளைவான கடல்மட்ட உயர்வினால் உலகில் உள்ள எத்தனையோ தீவு நாடுகள் கடலில் மூழ்கவிருக்கின்றன என்பதை இந்தப் பயணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே, கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தக்கூடிய கொடும் வெயிலும், கடும் மழையும், பலத்த சேதம் விளைவிக்கும் பெரும் சூறாவளிகளும் உருவாகி உலக மக்களை பாதிப்படைய வைக்க இருக்கின்றன என்பதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. ஆனால், நம் அலட்சியத்தால் நாம் அவற்றை வரவேற்றுதான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!'' என்று சொன்னவர், நம் அரசு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினார்.

"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். கடலோர மாவட்டங்களில் உள்ள நிலங்கள் மூழ்கலாம். பக்கத்து நாடான வங்கதேசமும் சந்திக்கவிருக்கும் இப்பிரச்னையால் அங்கிருந்து ஏறத்தாழ நான்கு கோடி மக்கள் 'சுற்றுச்சூழல் அகதிகள்' (Ecological Refugees) என்ற பெயரில் இந்தியாவில் தஞ்சமடையலாம். ஆக, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிட வேண்டும்.

இந்திய நாட்டின் முதுகெலும்பு என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்படும் விவசாயிகளின் பிரச்னைகளை சீர்செய்ய வேண்டும். ஆனால், நாமோ மேற்கத்திய நாடுகள் செய்த தவற்றைதான் செய்துகொண்டிருக்கிறோம். பழங்குடி மக்களின் நிலங்களையும், விவசாய நிலங்களையும் பெரும் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துகிறோம். அதனால் எழும் பிரச்னைகளை மக்களின் அரசாக நின்று சீர் செய்யாமல், அதிகார அரக்கனாக அடக்குகிறோம்.

பசுமைத் தொழிற்புரட்சியை இந்தியா முன்னின்று தொடங்கும்பட்சத்தில் அது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்!'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இனம் புரியாத பயம் ஒன்று நம் மனதைக் கவ்விக் கொண்டதை மறுப்பதற்கு இல்லை!

நன்றி லாவண்யா
நன்றி அவள் விகடன்




5 Comentários:

பிரேமா மகள் said...

அந்த லாவண்யா பொண்ணு,, நல்ல புத்திசாலி போல... நானும் அவள் விகடனில் படிச்சேன்...நல்ல எழுத்து நடை....

வால்பையன் said...

அந்த லாவண்யா பொண்ணுக்கு இதை எழுதி கொடுத்தது யாருப்பா!?

அந்த பொண்ணுக்கு இம்புட்டு அறிவு கிடையாதே!

Unknown said...

//.. அந்த லாவண்யா பொண்ணு,, நல்ல புத்திசாலி போல... நானும் அவள் விகடனில் படிச்சேன்...நல்ல எழுத்து நடை...//

நல்லா இருக்கு, ஆனா நீங்களே பாராட்டிக்கறது டூ மச்..

Anonymous said...

"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். //
ஆ ...பயமாருக்கு...

ராசு said...

If u want to read your blog by all try to change to background black to some one readable.

We cant read the content with this black background.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO