Tuesday, April 27, 2010

நான் உதயச்சந்திரன் ஆனது எப்படி?


1993-ம் வருட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய அளவில் 38-வது ரேங்க் பிடித்தபோது உதயச்சந்திரனின் வயது 23. அந்தத் தேர்வுகளில் முதல் கட்டத்தைத் தாண்டவே தமிழக மாணவர்கள் தவித்துத் திண்டாடிய வேளையில், முதல் முயற்சியிலேயே அந்த உயரம் தொட்ட உதயச்சந்திரனின் உழைப்பு அபாரமானது!


உன் இயல்பு உன்னை வடிவமைக்கும்!

''விகடன் விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க தியேட்டருக்குப் போற, தினமணி தலையங்கங்களைப்பத்தி விவாதிக்கிற மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். நாமக்கல்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவுக்கு பொதுஅறிவு ஆர்வம் ஜாஸ்தின்னா, அம்மாவுக்கு தமிழ் மொழியின் மீது காதல். ரெண்டு பேரும் பல விஷயங்களில் முரண்படுவாங்க. அந்த முரண் சுவைகளை ரசிச்சு வளர்ந்தேன். பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''


உன் தேவை, உனக்கு வழங்கப்படும்!

''மதிப்பான வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்படிப்புகள் படிக்க அலைபாயும் மத்திய தர மனப்பான்மைக்குத் தப்பாம என்னையும் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்தாங்க. ஆனா, பல தேடல்களுடன் இருந்த நான், சிவில் சர்வீஸ் படிப்பை என் இலக்கா நினைச்சேன். அப்போதெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வட இந்திய மாணவர்களின் ஆதிக்கம் அதிகம். தமிழகத்தில் இருந்து ஒருவர்கூட நேர்முகத் தேர்வை எட்டியிராத காலம். என் விடுதி அறைக் கதவில் 'ஜில்லா கலெக்டர்' என்று எழுதும் அளவுக்கு கிண்டல் கேலிகள். அவநம்பிக்கைகளுக்கு இடையே, அம்மா மட்டும்தான் என் பக்க பலமாக இருந்தார். அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதிகள் எனக்கு இருந்தன என்று நம்பிக்கை. எதிர்கொண்டேன். வெற்றிகொண்டேன். நான் கல்லூரிக் காலங்களைச் செலவிட்ட ஈரோடு ஜில்லாவுக்கே மாவட்ட ஆட்சியராகச் செல்லும் வாய்ப்பு. ஆசை ஆசையாக எனது விடுதியைத் தேடி ஓடினேன். அடுத்தடுத்த கதவுவெட்டுப் பதிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டாலும், காற்றில் அலைந்துகொண்டு இருந்த 'ஜில்லா கலெக்டர்' வரிகளை என் கண்கள் கண்டுகொண்டன. எனக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சது... 'உனக்கு எது தேவை என்று நீ முடிவு செய். அதை இந்தச் சமூகம் உனக்கு நிச்சயம் வழங்கும்!''

உன் வருத்தங்களை வரலாறு ஆக்கு!

''என் அப்பா ஒரு வணிகர். நான் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர் வியாபாரத்தில் கொஞ்சம் சிரமப்பட்ட காலம். கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்த கல்விக் கடனுக்காக வங்கியை அணுகினோம். மதிப்பெண் அல்லாத சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்த வலி இன்னமும் உள்ளுக்குள் இருக்கிறது. காலங்கள் கடந்து நான் ஈரோடு மாவட்ட ஆட்சிப் பணியில் இருந்த நேரம். மனுநீதி நாள் அன்று தன் மகனுக்கு கல்விக் கடன் வழங்கக் கோரும் விண்ணப்பத் துடன் வந்த ஒரு தாய், என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, 'ஐயா! என் மகன் நல்லா படிப்பான். ஆனா, கல்விக் கடன் கொடுக்க மாட்டேங்குறாங்க. என் மகன் வாழ்க்கை இப்போ உங்க கையிலதான்யா இருக்கு'ன்னு என் கால்ல விழுந்துட்டாங்க. அதிர்ச்சியின் உச்சத்தில் அந்த அம்மா என் காலில் விழுவதைத் தடுக்கிறேன். அந்த சங்கடச் சூழ்நிலையிலும் அந்த மகனின் உணர்ச்சி களை நான் கவனித்தேன். 'நல்லாப் படிக்கத்தான் முடியும். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற இயலாமையிலும், தன் படிப்புக்காகத் தன் தாய் இன்னொருவன் காலில் விழுவதைக் காணச் சகிக்க முடியாத வேதனையிலும் கண்ணீர் மறைத்து முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொண்டான். மறுநாள் காலை அந்த மாணவனுக்கான கல்விக் கடனைப் பெற்றுக் கொடுத்தேன். அதன் பிறகு மாவட்டம் முழுக்கத் தொடர் முகாம்கள் நடத்தி, ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடன்களை வழங்கவைத்தோம். ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் எந்தத் துயரமும் அவன் தலைமுறையைத் தாண்டக் கூடாது. அதை மாற்றியமைப்பதற்கான முயற்சி களை ஒவ்வோர் இளைஞனும் அவனுடைய பொற்காலத் தில் சாதிக்க வேண்டும்!''



உன் கல்வி உன்னைக் கண்ணியமாக்க வேண்டும்!

''சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மானுடவியல்தான் (Anthropology) எனது விருப்பப் பாடம். விமர்சனப் பார்வைகொள்ளாமல் மனித மனங்களின் மென் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொடுப்பது மானுடவியல் பாடம். எந்தப் பெரிய செயலையும் சின்னச் சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவதுதான் இன்ஜினீயரிங் படிப்பின் அடிப்படைத் தத்துவம். மதுரையில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தல் களை வெற்றிகரமாக அரங்கேற்ற உதவியது எனது கல்வி கற்றுக்கொடுத்த அந்த இரண்டு குணங்கள்தான். தேர்தல்கள் நடத்துவதற்கு எதிர்ப்பினைப் பதிவுசெய்த தரப்பினர் சார்பாக என்னைச் சந்திக்க வந்தார் செல்லக்கண்ணு. அவரி டம் எந்த விதத்திலும் சமரசத்துக்குப் பணிந்துவிடக் கூடாது என்ற உறுதியான உடல்மொழி தொனித்தது. 'வாங்க செல்லக்கண்ணு... நல்லா இருக்கீங்களா? நாலு தலைமுறைக்குப் பிறகு உங்க வீட்ல பெண் குழந்தை பிறந்திருக்காம்... பாப்பா நல்லா இருக்கா?' என்று கேட்டேன். அதைக் கொஞ்சமும் எதிர்பாராதவர், அதை மறுக்க முடியாதவர்... முன்தீர்மானிக்கப்பட்ட தன் உடல் மொழியைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவரைச் சம்மதிக்கவைப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. தொடர் நிகழ்வுகள் அந்தத் தேர்தல்களைச் சாத்தியப் படுத்தின. உணர்ந்து கற்ற கல்வி தினசரி வாழ்க்கையில் நம் கைபிடித்தே நடக்கும்!''


நன்றி - ஆனந்த விகடன்...


(இவர் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்ததமைக்கு பெருமை கொள்கிறோம்)





Friday, April 23, 2010

வேலை வாய்ப்பு....


வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்....

தற்போது நண்பர் பதிவர் சங்கமேஸ்வரன் (சங்கவி) அவர்கள் அலுவலகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் ஈரோடு, கோவையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி உள்ளார்கள். கீழ்கண்ட வேலைகளுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தகுதியுள்ளவர்களாகவும் வேலை வாய்ப்பிற்கு காத்திருப்பவர்களாகவும் இருந்தால் அவர்களின் சுயவிபரக்குறிப்பினை (பயோடேட்டா) கீழ்கண்ட நண்பரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..

  • sat10707@gmail.com


Top MNC Company in Coimbatore…

1. Software Engineer

2+ years of Web based development experience

(Asp.net, C#, MS SQL, JavaScript)

Experience with AJAX / ATLAS an advantage

Contact: karthikeyanp365@gmail.com

••••••••••••••

2. Process Associate (Voice) - Night Shift

Experience in a US outbound Call center

Excellent English Communication / Comprehension skills

Fresher can also apply

Contact: sat10707@gmail.com

Note: Please mention #567 as a reference ID in your resume.


நன்றி

சங்கவி


Wednesday, April 14, 2010

கோடியில் இருவர்...


சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப்
பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் – 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் – 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.

குறிப்பு:
இவர்களுக்கான பாராட்டுவிழா நாளை (15.04.10) வியாழன் இரவு 8 மணிக்கு ஈரோடு சிவில் இன்ஞ்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில் நடைபெறுகிறது.
அது தொடர்பான அழைப்பு இடுகை இங்கே கோடியில் இருவர் - பாராட்டு விழா

நன்றி ஈரோடு கதிர்...

Tuesday, April 6, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்....

நண்பர்களுக்கு,

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.


எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.


கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk

முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


தொலைப்பேசி எண்: 9791460680
நன்றி : http://umakathir.blogspot.com



  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO